மப்றூக்
காதலை முதலில் வெளிப்படுத்தியவர்கள் பெண்களில் எத்தனை பேர்
இருப்பார்கள் என்று கணக்கிட்டால், அது பெரியதொரு தொகையை நமக்குத் தராது! பெண்கள் நாணம் அதிகம் கொண்டவர்கள், அதுதான் இதற்கான காரணம் என்று இதற்கு வியாக்கியானம் வேறு வைத்திருக்கிறார்கள் சிலர்!
ஆண்கள்தான் தமது காதலை முந்திக் கொண்டு, அதிகமாய் வெளிப்படுத்தி விடுகிறார்கள். இதற்குக் காரணம் ஆண்களிடமுள்ள அளவுகடந்த தைரியம் அல்லது வீரம்தான் என்று வாதிடுகின்றனர் வேறு சிலர்!!
மேலேயுள்ள காரணங்கள் இரண்டோடும் எனக்கு உடன்பாடுகள் இல்லை. அப்படியென்றால் தனது காதலை முதலில் சொல்லும் பெண், நாணம் கெட்டவளா? காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் ஆண், தைரியமற்றவனா?
சொல்லப்படாத காதல்கள் கதைகள் அதிகமாய் பெண்களிடம்தான் உள்ளன. எங்கே நான் என் காதலை இழந்து விடுவேனோ எனும் பயத்தில்தான் ஆண்கள் தமது காதலை முந்திக் கொண்டு சொல்லி விடுகிறார்கள்.
காதலைச் சொல்வதில் பெண்கள் ஆமை போலானவர்கள்
ஆண்கள் கோழிகள் மாதிரி!
ஆயிரம் கனவுகள் மனசுக்குள் கிடந்தாலும், பெண்கள் அதை முதலில் சொல்வதேயில்லை. ஆனால், ஆண்கள் தமது காதல் குறித்த ஒற்றைக்
கனவையே தனது காதலுக்குரியவளிடம் ஒப்புவித்து விடுகின்றனர்!
எங்கே நான் காதலைச் சொல்லப்போக, அது மறுக்கப்பட்டு விடுமோ? அப்படி மறுக்கப்பட்டால், அது எனக்கு அவமானமில்லையா என்பது பெண்ணின் முன்னெச்செரிக்கை மிகுந்த கவலை! அவமானப்பட்டாலும் பரவாயில்லை மனசுக்குப் பிடித்த அவளிடம் காதலை ஒப்புவித்து விட வேண்டும் என்பது ஆணின் கவலை!
பெண்கள் காதலை விடவும் கௌரவத்தை தூக்கிப் பிடிப்பவர்கள்.
ஆண்களோ, காதலுக்காக கொளரவத்தைக் கூட, தூக்கி எறிபவர்கள்!
முதன் முதலில் எனக்குள் கிடந்த காதலை நான்தான் சொல்லியனுப்பினேன்!
காதலை மிக அதிகமாக நேசிப்பவர்கள் பெண்கள்தான் என்பது – உண்மையாகவே, பெண்களைச் சந்தோசப்படுத்த ஆண்கள் கூறும் அழகிய பொய்கள்!
0
(சூரியனில் ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)
